ஜெயலலிதா மரணத்தில் "சசிகலா எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை" - ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை என ஆறுமுகசாமி விசாரணையில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் "சசிகலா எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை" - ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், 2-வது நாளாக இன்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

அப்போது, 2011-12 ஆண்டு மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாக எவ்வித தகவலையும் காவல்துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி, சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரி தான் என வாக்குமூலம் அளித்தார்.

ஜெயலலிதாவை குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அவர் தன்னை அழைத்து சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளிக்க வேண்டும் என கூறியதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதே நேரத்தில் பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் அப்போதைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் என ஜெயலலிதா கூறியதாகவும் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

அப்போது தான் மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்ததாகவும், அதற்கு அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும் எனவும், சென்னைக்கு சென்று சொன்னதை செய் என ஜெயலலிதா கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுமார் 6 மணிநேரம் வரை ஓ.பன்னீர்செல்வத்திடம் நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்தது.