"நாட்டில் நடப்பதை திசைத்திருப்பக் கூடிய வகையில் சீமான் பேசியது அதிர்ச்சியளிக்கிறது" -தொல். திருமாவளவன்!

"நாட்டில் நடப்பதை திசைத்திருப்பக் கூடிய வகையில் சீமான் பேசியது அதிர்ச்சியளிக்கிறது" -தொல். திருமாவளவன்!

நாட்டில் நடக்கும் சம்பவங்களை திசைத் திருப்பக் கூடிய வகையில் சீமான் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை  விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்றோம். மணிப்பூர் முகாமங்களில் தங்கி உள்ள 2 தரப்பு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திந்தோம். அவர்களை மத்திய- மாநில அரசுகள் பாதுகாக்க எந்த அக்கறையும் எடுக்கவில்லை எனக் கூறினார்கள். குக்கி சமுதாயத்தை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மெய்தி சமூக மக்கள் 8 ஆயிரம் பேர் முகாமங்களில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தன்னார்வ குழுகள் உணவு, உடை வழங்கி வருகின்றனர். மாநில அரசு போதிய உதவிகளை செய்யவில்லை. இது குறித்து கோரிக்கை மனுவை குடியரசு தலைவரிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் 31 பேர் சந்தித்து வழங்கினோம். மணிப்பூர் மக்களுக்கு சுமூகமான சூழ்நிலை வேண்டும். பிரதமர் நேரடியாக சென்று சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ஆனால் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் மணிப்பூரில் சுமூகமான தீர்வை எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது. பிரதமர் மோடி ஒரு முறை வருத்தத்தை பதிவு செய்தார். ஆனால் மணிப்பூர் குறித்து கருத்துத் சொல்லக் கூட தயாராக இல்லை" எனக் கூறினார் 

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து, "மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும். பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியும் கூட பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் நீடித்து கொண்டு இருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது எனக் கூறிய அவர், மணிப்பூரில் செயற்கையான அமைதி நிலவுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் வன்முறைகள் தொடர்கின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். மணிப்பூர் மாநில அரசு செயலிழந்து கிடக்கிறது. அந்த முதல்வரை உடனே மாற்ற வேண்டும் என குடியரசு தலைவரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, "எல்லா நாடுகளிலும் சிறுபான்மை பிரிவினர் என ஒரு சமூக பிரிவினர் இருக்கின்றனர். சிறுபான்மையினரை மதத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்த பார்க்கிறோம். தமிழ்நாட்டில் நாம் மொழி அடிப்படையில் பார்த்தால் தமிழர்கள் பெரும்பான்மை. அதில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் பெரும்பான்மைக்குள் வருவார்கள் என மொழி, இன அடிப்படையில் சீமான் வாதத்தை வைக்கிறார். இந்தியாவில் மத அடிப்படையில் பெரும்பான்மை, சிறுபான்மை அரசியல் நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இந்துக்களை பெரும்பான்மை என்றும் மூஸ்லிம், கிறிஸ்துவர்கள் சிறுபான்மை என்றும் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் சொல்லும் படி தான் கட்டுபட்டு நடக்க வேண்டும் என அரசியல் செய்கிறார்கள். அந்த அரசியலை இது திசை திருப்புவதாக இருக்கிறது. சீமான் சொல்வதில் லாஜிக் இருக்கிறது. ஆனால் நடைமுறை சாத்தியமாக எந்த அரசியல் கூறும் இல்லை. உலகம் முழுவதும் மத அடிப்படையில் தான் பெரும்பான்மை, சிறுபான்மை பார்க்கிறார்கள். மொழி அடிப்படையில் தேசிய இன முரண்கள் இருக்கின்ற என்றாலும் கூட மொழி, இன அடிப்படையில் சிறுபான்மை இருக்கிறார்கள் என்றாலும் கூட மத அடிப்படை வாதம் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன. அது தான் இந்தியாவிலும் இருக்கிறது. இந்தியாவில் மத அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.உள்பட சங்பரிவார் கும்பல் கையில் எடுத்து அவர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டி விடப்பட்டுள்ளது. அரியானா கலவரத்தை தொடர்ந்து, ஜெய்பூர் சென்ற ரெயிலில் இஸ்லாமியர்கள் என்பதற்காக சுட்டுக் கொன்றார்கள். மொழி பேசக்கூடியவர்கள் என்பதால் அல்ல. அதேபோல மணிப்பூரில் நடந்த வன்முறையில் கூட மொழி வேறுபாடுகள் இருந்தாலும் இன அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தாலும் கிறிஸ்துவர்கள் இந்துக்கள் என்ற முரண்பாட்டை பா.ஜ.க. சங்பரிவார் அமைப்புகள் வன்முறைக்கு வழிவகுத்தன. வன்முறைக்கு பல காரணங்கள் இருந்தாலும் பிளவுப்படுத்த மதம் தான் கூறாக இருக்கிறது. இவற்றை திசை திருப்புவதாக சீமானின் பேச்சு அமைந்து உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் சங்பரிவார்களின் அரசியலுக்கு செயல் திட்டங்களுக்கு துணை போகிற வகையில் கருத்துகளை பேசி வருவது மிகவும் ஆபத்தானது" எனக் கூறினார். 

மேலும் "சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து நீதிபதி தலைமையிலான குழுவை முதலமைச்சர் அமைத்து உள்ளார். அந்த குழு அறிக்கையை அளித்திருப்பதாக தெரிகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வலியுறுத்தி வருகிறது. அனைவரையும் விடுதலை செய்ய அந்த குழு அறிக்கை தந்து இருக்கும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:"காவல்துறை தமிழ்நாடு அரசின் கைகளில் இருக்கிறதா... என்.ஐ.ஏ கைகளில் இருக்கிறதா?" நெல்லை முபாரக் கேள்வி!