"கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக திருமாவளவனை நியமிக்காதது ஏன்? " ஜெயக்குமார் கேள்வி!

"கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக திருமாவளவனை நியமிக்காதது ஏன்? " ஜெயக்குமார் கேள்வி!

சமதர்மம் பேசுபவர்கள் இந்திய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக திருமாவளவனை  நியமிக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மம்தா பானர்ஜி அவர்கள் கண்டனத்தை தெரிவிக்கிற வகையில் உதயநிதி கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். பலர் சனாதனம் குறித்து உதயநிதி கூறிய கருத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

தமிழ்நாடு கொலை, கொள்ளை மாநிலமாக மாறி வருகிறது. வாழ்வதற்குரிய நிலைமையை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. சட்ட ஒழுங்கு சந்து சிரிக்கின்ற வகையில் ஒரு நாடு சீர் கெட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உள்ளது. மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, பால் விலை என விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை" என தெரிவித்தார்.

திட்டமிட்டு மக்களை ஏமாற்ற வேண்டும், திசை திருப்ப வேண்டும். உழலை திசை திருப்ப சனாதனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விமர்சனப் பொருளாய்  உதயநிதி பேசி இருக்கிறார். சமதர்மம் பேசுபவர்கள் இந்திய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக திருமாவளவனை  நியமிக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை அப்போது சமதர்மம் எங்கு போனது என கேள்வி எழுப்பினார்.

உதயநிதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகம் தேவை, மக்களை திசை திருப்பும் முயற்சியாகவும் மக்களை ஏமாற்றும் முயற்சியையும் உதயநிதி இதனை செய்து வருகிறார். இது அனைத்தும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில்  பிரதிபலிக்கும். இந்த ஆட்சிக்கு எதிராக அதிமுக வின் அலை பெரிதாக இருக்கும் எனக் கூறினார். 

ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் காவல்துறையும் இன்று அடிவாங்கும் நிலைமையில் தான் உள்ளது. அரசு ஊழியர்களாகிய ஆசிரியர்கள் வீதியில் போராடுகிற நிலை தமிழகத்தில் உள்ளது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எந்த மதமாக இருந்தாலும் மதத்தை இழிவு படுத்துவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு மதத்தை இழிவு படுத்தினால் அது யாராக இருந்தாலும் அது தண்டனைக்குரிய விஷயம். உதயநிதி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதினால்  அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு தகுதி இல்லாதவராக கருதப்படுவதாக கூறினார்.

இதையும் படிக்க:  ஒன்றானுந் தீச்சொல்: இயக்குனரின் மனைவியிடம், பொது மேடையில் அநாகரிகமாக பேசிய ஷாருக்!!