குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்.. டாக்டர் சுப்பையா வழக்கில் தீர்ப்பு...

பிரபல நரம்பியல் மருத்துவர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்.. டாக்டர் சுப்பையா வழக்கில் தீர்ப்பு...

கடந்த 2013 செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வைத்து பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார்.  தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் ஆகிய  10 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டபட்ட 10 பேர்களில் 2 பேர் வழக்கறிஞர்கள், 2 பேர் ஆசிரியர்கள், ஒருவர் அரசு மருத்துவர், ஒருவர் இன்ஜனியர், மற்றவர்கள் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆகிவிட்டார். 

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார்.   குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பில் ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஸ்மனராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர்  ஆஜரானார்கள்.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.  இருதரப்பு வாத, பிரதிவாதங்கள் முடிந்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த  முதலாவது கூடுதல் அமர்வு  நீதிமன்ற நீதிபதி அல்லி,  குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளார்.

அரசுதரப்பில் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி தண்டனை விவரம் பற்றி இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் விஜயராஜ், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.