சசிகலா பேசியது அமமுகவினரிடம்... அதிமுகவினரிடம் இல்லை!! கே.பி. முனுசாமி ஆவேசம்

அதிமுகவாலும், ஜெயலலிதாவாலும் சாதாரண நிலையில் இருந்த சசிகலா, தற்போது தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் கோடீஸ்வரர்களில் ஒருவராக அவர்களது குடும்பத்தினர் உள்ளனர்.

சசிகலா பேசியது அமமுகவினரிடம்... அதிமுகவினரிடம் இல்லை!! கே.பி. முனுசாமி ஆவேசம்

சீக்கிரம் வந்துடுவேன் ஒண்ணும் கவலைப்படாதீங்க. கட்சியெல்லாம் சரி பண்ணிடலாம் என்ற சசிகலாவின் ஆடியோவெளிவந்து தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. தற்போது அதே போல கொரோனா குறைந்த பின்னர் எல்லாரையும் பார்ப்பேன் என்ற சசிகலாவின் மற்றொரு ஆடியோவும் வெளிவந்துள்ளது. 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. சசிகலா அதிமுகவில் இல்லை. சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலாவை முன்னிறுத்தி, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்தக் குழப்பத்திற்கு ஒரு அதிமுக தொண்டரும் மசிய மாட்டார்கள்.

அதிமுக தொண்டர்களும், பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளும் கட்டிக்காத்து, இந்த இயக்கத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசைதிருப்பி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

அவர்களுடைய எண்ணம் ஈடேறாது. சசிகலாவிடம் எந்த ஒரு அதிமுக தொண்டரும் பேசவில்லை. மாறாக, சசிகலாதான் தொண்டர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார். அவர் பேசும் தொண்டர் அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல. அமமுக தொண்டர்களிடம். சசிகலா தன்னோடு இருக்கும் ஒருசில நபர்களைத் தேர்வு செய்து இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இந்தக் குழப்பம் நிச்சயமாக வெற்றி அடையாது. இதன் மூலம் சசிகலா தான் ஏமாறுவார்.

அதிமுகவாலும், ஜெயலலிதாவாலும் சாதாரண நிலையில் இருந்த சசிகலா, தற்போது தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் கோடீஸ்வரர்களில் ஒருவராக அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். இந்த இயக்கத்தைத் உயர்த்தக் காரணமாக இருந்த ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடைவதற்காகவாவது சசிகலா ஒதுங்கி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஜெயலலிதாவின் பாவம் சசிகலாவையே சேரும்.

சசிகலா எந்தச் சூழலிலும் அதிமுகவில் நுழைய முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை. அதிமுக தொண்டர்கள் தெளிவாக இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.