கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு.. பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை!!
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கு தொடர்பாக கைதான தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி, விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தெரிவித்தது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்முறையாக வெடித்த மாணவி தற்கொலை விவகாரம்:
அதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டம் திடீரென்று வன்முறையாக வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டதுடன் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது:
இது தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 5 காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி ,தரப்பில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் ஒரு நாள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 5 பேரிடமும் கிடுக்கிபபிடி விசாரணை நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவு:
இதனிடையே கனியாமூரில் கலவரத்தை உருவாக்கி போலீஸ் பேருந்தை எரித்த கருப்பு படை வன்முறையாளரின் முக்கிய குற்றவாளியை கையும் களவுமாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவரை 15 நாள் நீதிமன்ற காவல் அடைக்கவும் கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.