பணம் கேட்ட வாடிக்கையாளருக்கு அடி உதை....! அடாவடியில் இறங்கிய நிதி நிறுவன ஊழியர்கள்...!
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் அருகே சபரி தென்றல் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கிய இந்த நிதி நிறுவனத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கான சீட்டு ஒன்றை தொடங்கி ஆட்களை சேர்த்து வந்துள்ளனர்.
ஆனால் பெரும் தொகைக்கு யாரும் சிக்காத நிலையில் 2 லட்சமாக குறைத்து மீண்டும் ஆட்களை சேர்த்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பியோ - நவிதா தம்பதியை அணுகிய நிதி நிறுவனம், 6-வது தவணையிலேயே 2 லட்சம் ரூபாய் தந்து விடுவதாக உறுதியளித்தனர்.
இதனை நம்பிய நவிதாவும், மாதம் தோறும் தவணை தொகையை வங்கி மூலம் செலுத்தி விட்டு 6-வது தவணையின் போது முழு பணத்துக்கு எதிர்பார்த்துள்ளார். ஆனால் நிதிநிறுவனமோ, 2 லட்சம் ரூபாயை இன்று,.. நாளை,... எனக் கூறி சில மாதங்கள் அலைக்கழித்து வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பியோ, ஏப்ரல் 8-ம் தேதியன்று சபரி தென்றல் நிதி நிறுவன அலுவலகத்துக்கு சென்று தங்களுக்கான பணத்தை உடனே தருமாறு கேட்டுள்ளார். அப்போது நிறுவன ஊழியர்கள் சிலர் பியோவை அடித்து நொறுக்கினர். சட்டையை கிழித்து மிதித்ததோடு ஸ்க்ரூ ட்டிரைவர், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் மண்டையை உடைத்தனர். ரத்தம் சொட்ட சொட்ட சாலைக்கு ஓடி வந்த பியோவைக் கண்ட நவிதா அலறித் துடித்தார்.
மேலும், பல்வேறு கிளைகளைத் தொடங்கிய சபரி தென்றல் நிதி நிறுவனம் இன்னும் சில மாதங்களில் மூடி விடுவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன. இதனால் மிரண்டு போன பியோ, தங்கள் பணத்தை முன்கூட்டியே பெற்று விடுவதற்கு முயன்ற போது இப்படியான கோர நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க } கர்நாடக தேர்தல் பணிகள் தீவிரம்...! முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி..!
இந்த சம்பவம் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீசார் நிதிநிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களையும் போலீசார் ஒருமையில் பேசியதால் சில நிமிடங்கள் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல நிதி நிறுவனங்கள் மோசடி புகாரில் சிக்கிய நிலையில் தற்போது நிறுவன ஊழியர்கள் அடாவடியிலும் இறங்கியிருப்பது பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
இதையும் படிக்க } "பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே அரசின் நோக்கம்"