கிண்டி பன்னோக்கு மருத்துவமனை..! ஜூன் 3ல் திறப்பு...!!
கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்க நாளான ஜூன் 3ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை பொதுபணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கட்டுமான பணிகள் தரமாக மேற்கொள்ளப் படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "ஜூன் மூன்றாம் தேதி கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்படும். வரும் ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. தற்போது 90% மருத்துவ கட்டமைப்புகள் நிறைவு பெற்றுள்ளது. வரும் மே 15ஆம் தேதிக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவுபெறும்" என தெரிவித்தார். மேலும் "கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பெயர் சூட்டுவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்" என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.