கொடைக்கானல் : பிரேக் பிடிக்காமல் சாலை வளைவில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து...!

கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து...!

கொடைக்கானல் : பிரேக் பிடிக்காமல் சாலை வளைவில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து...!

குஜராத் மாநிலம் மிசானா மாவட்டம், உன்ஜனா கிராமத்திலிருந்து 42 நபர்கள் கர்நாடக மாநிலத்தில் சுற்றுலா பயணத்தை முடித்த பின்பு, அங்கிருந்து கர்நாடகா தனியார் பேருந்து மூலமாக ஊட்டி மற்றும் பழனியில் சுற்றுலா மேற்கொண்டனர். பின்பு நேற்று மாலை கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலா முடித்துக் கொண்டு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுற்றுலா செல்வதற்காக கொடைக்கானலில் இருந்து மதுரை நோக்கி பயணித்துள்ளனர். அப்போது, கொடைக்கானல் சாலை டம்டம்பாறை பகுதிக்கு கீழ், சாலையின் வளைவில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயற்சி செய்தபோது, பேருந்தில் பிரேக் பிடிக்காத நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு சாலைக்கு கீழ் கவிழ்ந்தது. 

அப்போது அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், கவிழ்ந்த பேருந்தின் பின்பக்கம் மற்றும் வலது புறம் உள்ள கண்ணாடிகளை உடைத்து பேருந்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை உடனடியாக மீட்டனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 42 பேருக்கும் எந்தவித சிறு காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் சிறு காயமுமின்றி தப்பிப்பதற்கு, பேருந்து கவிழ்ந்த இடத்தில் இருந்த இரண்டு மரங்கள் அரணாக இருந்ததால், பெரும் உயிர் சேதம் ஏற்படாமல் தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.