கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்...போலீசார் விசாரணை..!
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள்...!
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற புளியங்குடி போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை மேலும் விசாரித்த போது, அந்த மூன்று நபர்களும் போலீசாரிடமிருந்து தப்பியுள்ளனர்.
அப்போது, போலீசார் விரட்டி சென்று ஒரு நபரை பிடித்த நிலையில், மற்ற இரண்டு நபர்கள் தப்பி ஓடி உள்ளனர். அதை தொடர்ந்து, பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர் சிந்தாமணி வடக்கு ரத வீதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் தனுஷ்குமார் (22) என்பதும், அவர் சட்ட கல்லூரி மாணவர் என்பதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இரண்டு நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர் புளியங்குடி பகுதியில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.