உழைப்பாளர் தினம்...முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து...!

உழைப்பாளர் தினம்...முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து...!

உழைக்கும் தொழிலாளர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே தின நன்னாளில் அனைவருக்கும் தனது இதயம் நிறைந்த உழைப்பாளர் தினம் நல்வாழத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

மே 1 ஆம் தேதி நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், பலரும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழைக்கும் தொழிலாளர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்த பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தனது இதயம் நிறைந்த உழைப்பாளர் தினம் நல்வாழத்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மே தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ”உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தொழிலாளர்கள் தங்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிற நிலையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும் எனவும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனறும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க : கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உயர்நீதிமன்ற கருத்துக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு...கே.பாலகிருஷ்ணன் ட்வீட்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1-ம் தேதி  தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகத்தொழிலாளர்கள் உவகையோடு கொண்டாடும் உரிமைத் திருநாளாம் மே தினத்தில் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  தமிழ்நாடு மாநிலக்குழு புரட்சிகர நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.