எடப்பாடிக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஓபிஎஸ்...!

அதிமுக  பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடிக்கு  எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஓபிஎஸ்...!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை நிராகரிக்கக் கோரி ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்  வழக்கின் விசாரணையை  ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஆனால் வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என சூரியமூர்த்தி தரப்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி பிரியா முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதால், பொதுக்குழுவை எதிர்த்த மனுவை விசாரிக்கக்கோரி வாதிடப்பட்டது.  

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், ஓ.பி.எஸ். தரப்பில் கூறப்பட்டது.

அதிமுக  தரப்பில் விஜய பிரசாந்த் ஆஜராகி, மனுதாரர் சூரிய்மூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில்  கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, தான் உறுப்பினர் இல்லை என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என வாதிடப்பட்டது.

அப்போது பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற மனு குறித்து அனைத்து எதிர் மனுதாரர்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி பிரியா, விசாரணையை நாளை ஒத்திவைத்தார்