8 வயது மகனின் கையால் தாலி வாங்கி மறுமணம்... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கல்லூரி பேராசிரியை திருமணம்...

மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் செய்து கொண்ட கல்லூரி பேராசிரியை - மதுரை அருகே நடந்த புதுமைத் திருமணம்

8 வயது மகனின் கையால் தாலி வாங்கி மறுமணம்... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கல்லூரி பேராசிரியை திருமணம்...

கல்லூரி பேராசிரியை ஒருவர் தன்னுடைய எட்டு வயது மகனின் கையால் தாலியைப் பெற்று புதிய மணமகனை ஏற்றுக் கொண்டு மறுமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் மதுரை அருகே வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஆதிஸ். தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த சுபாஷினி ராஜேந்திரன் என்பவரை நேற்று திருமங்கலத்திலுள்ள பெருமாள் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.

ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சுபாஷினி, முன்னரே திருமணமாகி கணவரைப் பிரிந்து சட்டப்படி மணவிலக்குப் பெற்று வாழ்ந்து வருகிறார். இவருக்கு எட்டு வயதில் தர்ஷன் என்ற மகன் உள்ளார்.

ஓவியர் ஆதிசும் சுபாஷினி ராஜேந்திரனும் திருமணம் செய்ய முடிவெடுத்து, குடும்பத்தினர் முன்னிலையில் திருமங்கலத்திலுள்ள பெருமாள் கோவிலில் தாலி கட்டிக் கொண்டனர். இந்தத் தாலியை சுபாஷினியின் மகன் தர்ஷன் எடுத்துக் கொடுக்க, மணமகன் ஆதிஸ், மணமகள் சுபாஷினியின் கழுத்தில் கட்டினார். 

மேலும் நண்பர்களையே தங்களது உறவினர்களாகக் கொண்டு மாலை மற்றும் மெட்டி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். பிறகு பெரியார் படத்தின் முன்பாக மாலை மாற்றிக் கொண்டனர்.

தனது மகனின் கையால் தாலியைப் பெற்று, தான் ஏற்றுக் கொண்ட மணமகன் மூலமாக அதனைக் கட்டிக் கொண்ட பேராசிரியை சுபாஷினியையும், மணமகன் ஆதிஸையும் நண்பர்கள் பாராட்டினர்.

இத்திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் இத்திருமண நிகழ்வு வைராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.