திருமணமான 4 ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை...பெண்வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மோதிகொண்டதால் பரபரப்பு...!!

சிதம்பரம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை வாங்க வந்த பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 4 ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை...பெண்வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மோதிகொண்டதால் பரபரப்பு...!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உள்ள அறியகோஷ்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி கோகிலா, இவர்களுக்கு திருமணமாகி சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு கோகிலா, கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்திலுள்ள கோகிலாவின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின்பேரில் அங்கு வந்த உறவினர்கள் கோகிலாவின் உடலை தாய் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அறியகோஷ்டி கிராமத்தில் உள்ள உறவினர்களுக்கும் புதுப்பட்டினம் கிராமத்திலிருந்து வந்த உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கி கொண்டனர்.

இதில் அறியகோஷ்டி கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தமூர்த்தி சிவபிரகாஷ் ஆகியோருக்கு கத்தி வெட்டு ஏற்பட்டது. அதேபோல் புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மான்ரோலாராமன் என்பவருக்கு கத்தி வெட்டு ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்கிக் கொண்ட இரு தரப்பினரை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.