20ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்... திமுக கூட்டணி கட்சிகள் முடிவு...

மத்திய பாஜக அரசை கண்டித்து வரும் 20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது.

20ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்... திமுக கூட்டணி கட்சிகள் முடிவு...

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த 20-ஆம் தேதி இந்திய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற காணொளி கூட்டத்தில், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட மத்திய பா ஜக அரசின் மக்கள் விரோத ஜனநாயக - விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.  

அதன்படி, இந்த முடிவின் அடிப்படையில், செப்டம்பர் 20ம் தேதி, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திமுக  காங்கிரஸ் உள்ளிட்ட 10 கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில். மத்திய பா. ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.