இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு அளிக்க முடியாது..! - சென்னை உயர்நீதிமன்றம்.

இனி மூன்றாவது  பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு அளிக்க முடியாது..! - சென்னை உயர்நீதிமன்றம்.

மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்கக் கோரி ஆசிரியைகள் இருவர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை, 3வது பிரசவத்துக்காக பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பம் செய்தார்.  ஆனால், 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டும் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படும் எனக் கூறி, 3வது பிரசவத்துக்கு வழங்கப்படாது என்று உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து ஆசிரியை தாக்கல் செய்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது மனுதாரர் தரப்பில், மனுதாரர் ஆசிரியையாக பணியில் சேருவதற்கு முன் திருணமாகி, 2 குழந்தைகளை பெற்ற நிலையில் கணவர் இறந்து விட்டதால், மறுமணம் செய்தார் என்றும், அதன் பின் கருவுற்ற அவருக்கு கடந்த ஆண்டு இரட்டைக்குழந்தைகள் பிறந்ததால்  பேறுகால விடுப்பு கேட்டு அளித்த விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு என வாதிடப்பட்டது. 

அரசு தரப்பில், தமிழக அரசின் அரசாணைப்படி, 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே பேறுகால விடுமுறை வழங்கப்படும் என்பதால், 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார்,  இரு குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்ற அரசு  கொள்கை முடிவை மீறி, 3 வது பிரசவத்துக்கு  விடுப்பு கோர முடியாது என்றும், மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான் எனக் கூறி,  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதேபோல, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையும் 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரிய வழக்கையும் நீதிபதி சதீஷ்குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும்  படிக்க  | " சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார்" - கே. எஸ். அழகிரி குற்றசாட்டு.