அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; நாளை விசாரணை!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருமுறை மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் ஜூன் 16ந் தேதி மற்றும் செப்டம்பர் 20ம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி-யால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் நேற்றும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். 

நேற்றைய சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில் சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார். 

மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு  மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை  நாளை 
விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க:ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் சிக்கிய நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் பணம்!!