எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து   200 -க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் திமுக, காங்கிரஸ்  கட்சிகளில் இருந்து    200 -க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

தமிழகத்தில் பொது பிரச்சனைகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை எனவும் திமுக எதை செய்தாலும் ஜால்ரா போட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளை  சேர்ந்த 200 -க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே. அர்ஜுனன், அணைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்த எஸ்.பி. வேலுமணி உரையாற்றுகையில்:-

எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு சிறப்பு பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டதாகவும் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ’ஆல் பாஸ்’ அறிவித்தார் என்று புகழுரை ஆற்றினார்.

மேலும், அதிமுகவில் தானும் உங்களை போன்று சாதாரண இடத்தில் இருந்து வார்டு செயலாளர், நகரச்செயலாளர், மாவட்ட செயலாளர் என அடுத்தடுத்து பதவி வகித்து தற்பொழுது  மாநில பொருப்பிற்கு வந்துள்ளேன் எனவும் கூறினார்.

அதுபோல சாதாரண கட்சி பொருப்பில் இருந்த அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தமிழகத்தின்  முதல்வராகவும், அதிமுகவின் பொதுசெயலாளராகவும் வளர்ந்துள்ளார் என்றும்,  நீங்களும் நாளை அதிமுகவின் மிகப்பெரிய பொறுப்பிற்கு வரமுடியும்.  அதிமுகவில் மட்டுமே இது சாத்தியம் என்றும் சுட்டிக்காட்டியதுடன்,  இந்த கட்சி மட்டுமே உறுப்பினர்களை ஒரு குடும்பமாக அரவணைத்து செல்லும் கட்சி. மக்களை காப்பாற்றும் கட்சி என்றும்  திமுகவை போல் குடும்ப கட்சியல்ல என்றும் சாடினார். 

அதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்:- 

கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் , குறிப்பாக கல்லூரி மாணவர்கள் எடப்பாடியார் தலைமையை  ஏற்று இன்று அதிமுகவில் இணைந்துள்ளதாகவும், மேலும் தமிழகம் முழுவதும் சாரை சாரையாக யாரும் மாற்றுக் கட்சியில் சேருவதில்லை  எடப்பாடியார் அதிமுக பொதுசெயலாளர் ஆனதில் இருத்து அனைவரும் அதிமுகவில் தான் சேருகின்றனர் என்றும் பெருமிதத்துடன் கூறினார். கோவை மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை கடந்த அதிமுக ஆட்சியில் செய்ததாகவும்ப், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த திட்டமும் திமுக அரசு செய்யவில்லை; மாறாக சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு  போன்றவைகளால் மக்களை பாதித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க     |  "மகளிர் உரிமைத்தொகை - நடைமுறைக்கு வருமா?" - ஈபிஎஸ் கேள்வி!

தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடியார் தமிழகத்திற்கு முதல்வராக வரவேண்டும் என அனைத்து மக்களும் நினைப்பதாகவும் அதனால்தான் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும், இளைஞர்களும் அதிமுகவில் இணைகின்றனர் என்றும் கூறினார். மேலும் கோவை குனியமுத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக ஐந்து பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகமும் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்  என்றும் வலியுறுத்தினார். விதிமுறைக்கு உட்பட்டு இதுபோன்று கட்டிடங்கள் கட்டப்படுகிறதா?  என்பதை ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேபோல் கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்; சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில்  காவல்துறை பெண் காவலர் துன்புறுத்தபட்டார்; என இவ்ற்றை சுட்டிக்காட்டிய அவர், காவல் துறையில்  தொடர்ந்து தற்கொலைகள் நடப்பதாகவும்  காவல்துறையினருக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.  டிஐஜி மன உளைச்சலில் இருந்தார் என்று அவரை கூப்பிட்டு விடுப்பு அளித்திருக்க வேண்டும் எனவும் இப்போது இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு பல அழுத்தங்களை கொடுத்திருப்பதாக சொல்கின்றனர் என்றும் கூறினார்.

நல்ல காவல்துறை அதிகாரியை இழந்திருக்கிறோம் என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என எடப்பாடி கேட்டிருப்பதாகவும்,  சிபிஐ தலையிட்டு இதில் உள்ள உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். டிஐஜி மரணம் தொடர்பாக முரண்பாடான தகவல்கள் இருப்பதால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

திமுக ஊழல்கள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை எனவும் பாஜகவின் அடிமை என அதிமுகவை பேசிக்கொண்டு இருந்தார்கள்; ஆனால்  காவிரி பிரச்சனை வந்தபோது 23 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது அதிமுகதான்  எனவும் பொது பிரச்சனை என வரும்போது மக்கள் பக்கம் நிற்கின்றோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

தற்போது  திமுகவை எதிர்த்து யாரும் பேசுவதில்லை; ஆனால் திமுக மோசமான ஆட்சி என மக்கள் முடிவு செய்து விட்ட சூழலில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்பொழுது நடந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

” அண்ணன் வைகோ, திருமாளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆகியோர் இப்போது பேசுவதே இல்லை”,  என்றும்  கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்கள் திமுக என்ன செய்தாலும் அடிமையாக ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் விமர்சித்தார். பொது பிரச்சினைகளுக்கு  திமுக கூட்டணி கட்சிகள்  பேசுவதில்லை எனவும் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையும் படிக்க     | பிச்சைகாரனாக இருந்தால் தான் உரிமை தொகை வழங்கப்படும்- சீமான் விமர்சனம்.