மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை...கோவையில் நடந்த சோகம்.!
கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் அடுத்த அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி தனலட்சமி, இவர்களுக்கு சசிக்குமார் என்ற மகனும் மனநலம் பாதிக்கபட்ட சுகன்யா என்ற மகளும் உள்ளனர். மகன் சசிகுமாருக்கு திருமணமானநிலையில் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடம் வசித்து வந்த, தாய் தனலட்சுமி குடும்ப பிரச்சனைகள் காரணமாக ஜோசியம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஜோசியர் வரும் காலங்களில் தனலட்சுமிக்கு கைகால்கள் வராமல் போய்விடும் எனக்கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த தனலட்சுமி, நேற்றிரவு தனது மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதில் தான் ஜோசியம் பார்த்ததாகவும், இனி வரும் காலங்களில் தனது கைகால்கள் வராமல் போய்விடும் என ஜோசியர் கூறியதாக சொன்ன அவர், நாங்கள் இருப்பது உனக்கு பிரச்சனையாக உள்ளது என்றும் தன்னால் தங்கையை கவனிக்க முடியாமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட சசிக்குமார் அவ்வாறு ஒன்றும் நடக்காது என ஆறுதல் கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் தொலைபேசியை எடுக்காததால் சந்தேகமடைந்த சசிகுமார் தனது நண்பரை தொடர்பு கொண்டு வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவரது நண்பரும் சசிகுமாரின் தாயான தனலட்சுமியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு தனலட்சுமி தூக்கில் தொங்கியநிலையிலும் சுகன்யா இறந்து நிலையிலும் கிடந்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து நண்பர் சிசிகுமாருக்கும் துடியலூர் காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.