ஆசிட் வீசி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயலும் மர்ம நபர்கள்...?
மீஞ்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த வயதான தம்பதி மீது ஆசிட் வீச்சு. கொள்ளையர்கள் கைவரிசையா என போலீசார் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மெரட்டூர் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதியர் மணி - கலாவதி. விவசாயியான மணி நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர், நள்ளிரவில் திடீரென ஜன்னல் வழியே மணி - கலாவதி மீது ஆசிட் வீசியுள்ளனர். அவர்கள் சுதாரித்த சிறிது நேரத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ஜன்னல் வழியே ஆசிட் வீசப்பட்டுள்ளது.
இதில் ஆசிட் மணியின் உடலில் விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் விளக்குகளை எரியவிட்ட நிலையில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து ஆசிட் வீச்சில் காயமடைந்த முதியவர் மணி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
தனியாக வசிக்கும் முதியவர்கள் மீது ஆசிட் வீசி, மயக்கமடைந்ததும் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில் செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.