இரு சக்கர வாகனத்தை சாதாரணமாக திருடி செல்லும் மர்ம நபர்... சிசிடிவி காட்சியில் சிக்கிய சம்பவம்...!
திருச்சி சமயபுரம் அருகே இருசக்கர வாகனம் திருடு போனதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தெற்கு ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல்அலீம்(55). இவர் கடந்த 2ம் தேதி சமயபுரம் நால் ரோடு பகுதியில் உள்ள ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த வாகனத்தை சாவியோடு நிறுத்திவிட்டு ஏடிஎம் மையத்திற்குள் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அதனை கவனித்த மர்ம நபர் ஒருவர், அப்துல் அலீமின் இருசக்கர வாகனத்தின் அருகே வந்து யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அவருடைய வண்டியை போலவே தனது கையில் இருந்த பையை இருசக்கர வாகனத்தில் கோர்த்து விட்டு மிக சாதுர்யமாக இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றுள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அருகில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் அப்துல்அலீம் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.