குழந்தையை கடத்தி சென்று தப்பியோடிய மர்ம நபர்...! தனிப்படை அமைத்து கண்டுபிடித்து கைது செய்த போலீசார்...!
நெல்லை ஆத்தங்கரை பள்ளிவாசலில் பெற்றோருடன் தூங்கிய குழந்தையை கடத்தி சென்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், நகையை திருடுவதற்காக குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.
குழந்தை கடத்தல்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில், அலி மூப்பன் தெருவை சேர்ந்த சாகுல் அமீது - நாகூர் மீராள் தம்பதியின் 3 வயது மகள் நஜிலா பாத்திமா. கடந்த 11-ம் தேதி சாகுல் அமீது தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தம்பதிகள் இருவருக்கும் இடையே அந்த குழந்தை தூங்கி கொண்டிருந்துள்ளது. 12-ந்தேதி அதிகாலை அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
போலீசார் விசாரணை :
இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர், குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
குழந்தை மீட்பு :
இந்த நிலையில், மறுநாள் அந்த மர்மநபர், குழந்தையை திருச்செந்தூரில் விட்டுவிட்டு தப்பி சென்றார். குழந்தையை மீட்டு போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திய மர்மநபரை கண்டுபிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கேரளா சென்ற தனிப்படை :
சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு தனிப்படை, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. தொடர்ந்து அந்த நபர் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அங்கு ஒரு தனிப்படை விரைந்தது.
மர்ம நபர் கண்டுபிடிப்பு :
சுமார் 10 நாட்களுக்கும் மேலாக அங்கு முகாமிட்டு இருந்த தனிப்படையினர் நேற்று இரவு, குழந்தையை கடத்தி சென்ற அந்த நபரை கண்டுபிடித்ததனர். அவரை பிடித்து கூடங்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது பாருக்(34) என்பது தெரியவந்தது.
நகை திருட திட்டம் :
சம்பவத்தன்று அவர் ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நஜிலா பாத்திமாவின் கழுத்தில் கிடந்த நகையை பார்த்த முகமது பருக் அதனை திருடுவதற்கு திட்டம் போட்டுள்ளார்.
தீவிர விசாரணை :
இதையடுத்து அந்த தம்பதியருடன் தூங்கி கொண்டிருந்த அந்த குழந்தையை திருச்செந்தூர் பகுதிக்கு கடத்தி சென்று, குழந்தையின் கழுத்தில் கிடந்த நகையை கழட்டி பார்த்ததில் அந்த நகை கவரிங் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் ஏமாற்றம் அடைந்த முகமது பருக், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.