நாமக்கல் : முடிவுக்கு வந்த 50 ஆண்டுகால பிரச்சனை...!!

நாமக்கல் : முடிவுக்கு வந்த 50 ஆண்டுகால பிரச்சனை...!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் அவதிப்பட்டு வந்த கிராம மக்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்த விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடத்தி கறி விருந்துடன் கிராம மக்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி வீரப்பம் பாளையம். அந்த பகுதி மக்களுக்கு மயானத்திற்கு செல்ல வசதி இல்லாததால் பல தலைமுறைகளாக ஓடை வழியாக சென்று இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வந்தனர். இதனால் பாதை இல்லாமல் மழை காலங்களில் ஓடையில் இறங்கி கிராம மக்கள் மயானத்திற்கு சென்று வந்தனர். 

இந்த நிலையில் பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து எம்எல்ஏ தங்கமணி மயானத்திற்கு செல்லும் வழித்தடத்திற்காக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மயானத்திற்கு செல்ல விவசாயிகள் வழிதடம் வழங்க முன்வந்தனர். 

இதையடுத்து மயானத்திற்கு செல்ல சாலைவசதி ஏற்படுத்தி, அதற்காக இடம் வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் எம்எல்ஏ தங்கமணி பங்கேற்று மயானத்திற்கு இடம் வழங்கிய விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். விவசாயிகள் இடம் வழங்கியதால் கிராம மக்களின் 50 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதற்கு கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

இதனால் இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் நடவடிக்கை எடுத்த எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கிராமமக்கள் மயானத்தில் கறிவிருந்து உடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர். அதனை தொடர்ந்து கிராம பிரச்சனைகள் குறித்து எம்எல்ஏ தங்கமணியிடம் கிராமமக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.