"மணல் குவாரிகளில் இயந்திரங்கள் பயன்படுத்த தடையில்லை" மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்!
ஆறுகளில், 25 ஹெக்டேர் பரப்புக்கு குறைவான பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வைப்பாறு நதியில் மணல் குவாரி அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்த வழக்கில், மணல் குவாரிகளில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மணல் குவாரிகளில் இயந்திரங்களை பயன்படுத்த அனுமதி அளித்து 2004 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், 2006 ஆம் ஆண்டு மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை வெளியிட்ட பிறகு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு வெளியிட்ட விதிமுறைகளில், இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் சில குவாரிகளில் மட்டுமே இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வைப்பாறு நதியில் மணல் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம், வழக்கின் விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதையும் படிக்க:'4 ஊராட்சி மன்ற தலைவர்கள் கைது' சீர்காழியில் பரபரப்பு...!