"வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்று தருவதுதான் நமது இலக்கு.....!"
பாராளுமன்ற தேர்தலில் பாமகவின் பலத்தை மாற்று காட்சியினர் அறிந்து கொள்ளும் வகையில்......
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓமலூர் சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மருத்துவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்று தருவதுதான் தங்களது இலக்கு என்று கூறினார். அதோடு, தமிழக அரசு, நமது கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து கடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு வீடாக சென்று மக்களை கடிதம் அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பேசினார்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பேசும்போது, வரும் பாராளுமன்ற தேர்தலில் பாமகவின் பலத்தை மாற்று காட்சியினர் அறிந்து கொள்ளும் வகையில் கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், கட்சியில் அனைத்து இளைஞர்களையும் சேர்க்க வேண்டும் என்றும், அவர்களை அரசியல் பயிலரங்கிற்கு அனுப்பி வைத்து அரசியல் பயில வைக்க வேண்டும் என்றனர்.
மேலும், அக்கூட்டத்தில் இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு முதல்வர், பிற்படுத்தபட்டோர் ஆணைய தலைவர் ஆகியோருக்கு வீடு வீடாக சென்று கடிதம் பெற்று அனுப்பி வைக்க வேண்டும் எனவும், தமிழை தேடி மருத்துவர் அய்யா பயணம் செய்து வருவதால், நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் உள்ள வணிக கடைகளின் பெயர் பலகையை தமிழில் வைக்க பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் கூறினர்.
அதோடு, ஓமலூர் உட்கோட்ட காவல்துறையில் உள்ள தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் மக்களை ஒருமையில் பேசி மிரட்டி வருவதாகவும், தொடர்ந்து அராஜகமாக நடந்துவரும் அவரை இடமாற்றம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், காவல் ஆய்வாளரின் அராஜக போக்கு அதிகரித்துள்ளது எனவும் கூறினர்.
இதையும் படிக்க } முதலமைச்சர் ஸ்டாலின் எடப்பாடியை போல் இருக்கவேண்டுமென ஆளுநர் விரும்புகிறார் - கே.எஸ்.அழகிரி!
இதன் காரணமாக, சேலம் மேற்கு மாவட்ட பாமக காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அறவழி போராட்டம் நடத்துவது, காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கொங்குபட்டி ஊராட்சி நிர்வாக அலுவலகம் சுமைதாங்கியில் அமைந்துள்ளதை அகற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க } குடிக்க வைத்ததும் குடி கெடுத்ததும் தான் திராவிட மாடல் - எச். ராஜா