பாமக எம்.எல்.ஏ. மீதான வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்த  உயர் நீதிமன்றம்!

இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாமக-வை சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கும், சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோலியாவுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் மனோலியா அளித்த புகாரில், திருமணத்தின்போது வரதட்சணையாக 200 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், 20 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொடுத்துள்ள நிலையில், மேலும் வரதட்சணை கேட்டு கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் ஆகியோர் கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். 

இந்த புகாரில், எம்.எல்.ஏ. சதாசிவம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.எல்.ஏ.சதாசிவம், மகன் சங்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,

எம்.எல்.ஏ. சதாசிவத்தின் மகன் மற்றும் மனோலியா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, குழந்தையின் நலனுக்காக கடந்த கால நிகழ்வுகளை மறந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடர விரும்புவதாக இருவரும் நீதிபதியிடம் தெரிவித்தனர். 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இரு தரப்புக்கிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் இந்த வழக்கை தொடர்வதில் அர்த்தம் இல்லை எனக்கூறி எம்.எல்.ஏ. சதாசிவம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 

பின்னர், குழந்தையின் பிறந்த நாளில் தாய், தந்தையரை சேர்த்து வைத்துள்ளீர்கள் இது கோடி ரூபாய் கட்டணம் வாங்குவதை விட மேலானது என இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிக்க: "ரயில் இயக்கத்தை தடுத்தால் 4 ஆண்டு சிறை" மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை!