நடுக்கடலில் விசைப்படகு மீது மோதிய பனாமா நாட்டு சரக்கு கப்பல்... கடலில் தத்தளித்த மீனவர்கள் பத்திரமாக மீட்பு...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுக்கடலில் விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் என மொத்தம் 17 பேர் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மாலை ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர். நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த "நேவிஸ் வீனஸ்" என்ற பனாமா நாட்டு சரக்கு கப்பல் விசைப்படகின் மீது மோதியது.
இதில் விசைப்படகு உடைந்து சேதமடைந்த நிலையில், விசைப்படகில் இருந்த சின்னத்துரை, அருள்ராஜ் ஆகிய இரண்டு மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து சக மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த கடலோர காவல் படையினர் கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிய மீனவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், எஞ்சிய 15-மீனவர்கள் மற்றும் சேதமடைந்த விசைப்படகையும் மீட்டு குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.