களக்காடு செல்லும் அரிக்கொம்பனுக்கு, மக்கள் எதிர்ப்பு!

களக்காடு செல்லும் அரிக்கொம்பனுக்கு, மக்கள் எதிர்ப்பு!

தேனி அருகே மக்களை அச்சுறுத்தி  வந்த அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு அருகே விடப்படவுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கிராமங்களில் அரிக்கொம்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படும் காட்டு யானை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8 பேரை கொன்றதாகவும், ஏராளமான விளை பயிர்களை நாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த காட்டு யானை கடந்த மாதம் 29ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது.

ஆனால், இந்த யானை கடந்த சில நாட்களுக்கு முன் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து,  கவுண்டன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணையில் முகாமிட்டிருந்தது. இதனைதொடர்ந்து யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், சின்ன ஓவுலாபுரம்  அருகே உள்ள பெருமாள் கோவில் பகுதியில் சுற்றி திரிந்த யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.  

இதனைதொடர்ந்து கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனிடையே பிடிபட்ட அரிக்கொம்பன் யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விட லாரி மூலம் ஏற்றி செல்லப்பட்டது. ஆனால் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் அருகில் இருப்பதால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர்.. பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை!