குற்றாலம் அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி..!

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

குற்றாலம் அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி..!

குற்றாலம் அருவிகளில் இன்று முதல் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும் என்பதால், இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் குற்றாலத்துக்கு வந்து சீசனை அனுபவித்து செல்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொற்று பாதிப்பு குறைந்து பரவல் கட்டுக்குள் இருப்பதால், இன்று முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அருவிக்கு வருபவர்கள் சமூக இடைவெளியில் நின்று குளிக்க செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரும் நுழைவு பாதையில் குற்றாலம் நகர பஞ்சாயத்து ஊழியர்கள் பொதுமக்களை பரிசோதனை செய்கிறார்கள். உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் தான் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.