ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், செல்லாது என அறிவிக்க...! உயர் நீதிமன்றத்தில் மனு...!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், செல்லாது என அறிவிக்க...! உயர் நீதிமன்றத்தில் மனு...!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான பி.விஜயகுமாரி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரம் செய்யப்பட்டபோது பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இரு வேட்பாளர்களுக்கும் தினமும் 10,000க்கும் மேற்பட்டோர் வாக்கு சேகரித்தததாகவும், அவர்களுக்கு நாளொன்றுக்கு 550 ரூபாய் வீதம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான உரிய கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 30 நாட்களை கடந்த நிலையிலும் இன்னும் தாக்கல் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது விதிமீறல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறாமல், விதிகளை மீறி 70 கொட்டகைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப்பதிவு நாள் வரை தினமும் வாக்காளர்கள் தங்கவைக்கப்பட்டு, வாக்குகள் பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில் அவற்றை தடுக்காமல் நடத்தப்பட்ட தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படவில்லை என்பதால் பிப்ரவரி 27ஆம் தேதி நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டுமென்றும், அதில் ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றத்தையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்டு 18 வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.