பணம் வைத்து சீட்டு விளையாடிய 16 பேரை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 16 பேரை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 1,80,000 ரூபாய் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

பணம் வைத்து சீட்டு விளையாடிய 16 பேரை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி அரசனட்டி பகுதியில் உள்ள குட்டி என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஏராளமானோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக, ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், குட்டி வீட்டில் சோதனை மேற்க்கொண்டனர்.

அப்போது அங்கு சீட்டு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 16 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 16 செல்போன்கள், ரூ.1,80,600 மற்றும் 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரில் 10 நபர்கள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் அனைவரையும், போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.