சர்வதேச கண்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைப்பதில் பெருமிதம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைப்பதில் பெருமிதம் அடைவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் உலக அளவிலான எக்ஸ்போ 2020 கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வரும் 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா, அமீரகம் உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இவற்றின் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் இந்திய அரங்கில் கண்காட்சி தொடங்கியது . மாநில அரசுகளும் தங்கள் தளங்களை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில், தமிழ்நாடு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் சென்றுள்ளார். துபாயில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், இந்திய அரங்கை பார்வையிட்டு தமிழ்நாடு தளத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் சார்பில் அரங்கை திறந்து வைப்பதில் பெருமிதம் அடைவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், இந்த அரங்கினை யார் பார்வையிட்டாலும், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த புரிதலை அவர்களுக்கு வழங்கும் என தெரிவித்தார்.
துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சந்தித்தார். அப்போது அவர் தனது இசைஅரங்கத்திற்கு வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஆர். ரகுமானின் ஸ்டுடியோவிற்கு சென்றார். அங்கு ஏ.ஆர். ரகுமான் தான் இசையமைக்கும் ஆல்பத்தை முதலமைச்சருக்கு போட்டுக் காட்டினார்.