”மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின், மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

”மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார், திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் நல பணியாளர்களை நியமனம் செய்தது திமுகதான் என்றும், அவர்களை வீட்டுக்கு அனுப்பியது அதிமுக எனவும் குற்றம்சாட்டினார். 

மேலும், உச்சநீதிமன்றத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கு தொடுத்துள்ளதாக கூறிய முதலமைச்சர், வழக்கின்  தீர்ப்பிற்கு பின் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று உறுதிப்பட தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 மாத ஆட்சி காலத்தில் திமுக செய்த சாதனையை எந்த ஆட்சியும் செய்யவில்லை என்பதை உறுதியாக கூற முடியும் என்றும் திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.