'பாஜக கொம்பன் என நின்றது கிடையாது'' பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்!

'பாஜக கொம்பன் என நின்றது கிடையாது'' பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்!

எந்த காலத்திலும் பாஜக தான் கொம்பன் என்று நின்றது கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 9-ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பான பாஜக அறிவுசார் பிரிவின் நிர்வாகிகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட அறிவுசார் பிரிவின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தமிழக மக்களும் அவரை விரும்புகிறார்கள். பாஜகவை சரியான முறையில் வழிநடத்தி செல்கிறார். மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்று கூறுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் எனக் கூறிய அவர்  2014ல் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்ததாகவும், பாஜக எந்த காலத்திலும் நான் தான் கொம்பன் என்று நின்றது கிடையாது எனக் கூறினார். 

அன்று மதிமுக, பாமக, தேமுதிக என பல கட்சிகள் அந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்ததாகவும், எந்த கட்சிக்கும் தாங்கள் பெரிய ஆள் என்று சொல்லவில்லை என்றும் அவர்களும் தாங்கள் பெரிய ஆள் என்று சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து, கூட்டணி என்று வரும்போது எல்லோரும் சமம் என தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுபவர்களை வெற்றி பெற வைப்பது பாஜகவின் கடமை எனவும் அதுபோல பாஜகவை வெற்றி பெற வைப்பது கூட்டணிக்கட்சிகளின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!