ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!

விரைவில் கைது செய்யப்படுவாரா ராஜேந்திர பாலாஜி..?

ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!

3. அதிமுகவுக்கு மட்டும் தான் நேரம் சரியில்லை என்று பார்த்தால் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களுக்கே நேரம் சரியில்லை போல. சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. கிட்டத்தட்ட வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை பெற்று கடையில் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவில் ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்ட நிலையில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4பேரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்தப் பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார் ராஜேந்திர பாலாஜி. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தன் பெயரை தவறாக பயன்படுத்திய விஜய் நல்லதம்பி என்பவர்தான் குற்றவாளி என்றும் 
அவரை காவல்துறை பாதுகாக்கிறது என்றும், தனக்கு எந்த தொடர்பில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதால், இருவருக்கும் முன்  ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார். இதேபோல புகார்தாரர்கள் தரப்பிலும் ராஜேந்திரபாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், விரைவில்  ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.