பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு!

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட உள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு!

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து, கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் இன்று மாலை வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர 1.76 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 1.43 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்திய 1.43 லட்சம் பேருக்கும் ரேண்டம் எண்கள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கையை நடத்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ரேண்டம் எண்களை மாணவர்களின் செல்போன் எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்க உள்ளது.கலந்தாய்வின் போது ஒரே கட் - ஆப் பெற்ற மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்பதில் சிக்கல் ஏற்படும் போது, அதை எளிதாக்க ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் பயனுள்ளதாக உள்ளது.10 எண்கள் கொண்ட ரேண்டம் எண்களில், யாருக்கு பெரிய எண் வருகிறதோ அவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த ஆண்டில், பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டதால், பெரும்பாலானோர் அதிக மதிப்பெண்களுடன் அதிக கட் - ஆப் பெற்றுள்ளனர்.கலந்தாய்வை நடத்தும் போது ஒரே மாதிரியான கட் - ஆப் பலருக்கும் வர வாய்ப்பு உள்ளதால், கணிதம், இயற்பியல், விருப்பப் பாட மதிப்பெண்கள், 12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் இவற்றுடன் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரேண்டம் எண்ணுக்கு இந்த முறை அதிக முக்கியத்துவம் உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.