ரேஷன் அரிசியில் எலி...அதிகாரிகள் ஆய்வு....

ரேஷன் அரிசியில் எலி இருப்பது போன்ற புகைப்படம்சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பரமக்குடி ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ரேஷன் அரிசியில் எலி...அதிகாரிகள் ஆய்வு....

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் சுமார் 140 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பரமக்குடி அருகே உள்ள தெளிசாத்தநல்லூர் ரேஷன் கடையில் மாரிமுத்து என்பவர் வாங்கிய அரிசியில் இறந்த நிலையில் எலி கிடந்ததாக கூறப்பட்டு, அது தொடர்புடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனையடுத்து பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சத்தியபாமா தலைமையிலான அதிகாரிகள் தெளிசாத்தநல்லூர் ரேசன் கடையில் ஆய்வு செய்தனர். ரேஷன் கடையில் இருந்து அரிசி மூடைகள், சீனி, பருப்பு, கோதுமை மூடைகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர். அப்போது தெளிசாத்தநல்லூர் ரேஷன் கடை அருகே கூடி இருந்த பொதுமக்களிடம் வட்ட வழங்கல் அலுவலர் சத்தியபாமா விசாரணையில் ஈடுபட்ட போது ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கப்படுவதாகவும், அதை சமைத்து உண்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.