ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பேமண்ட் முறை இன்று முதல்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள நியாயவிலை கடைகளில்  UPI டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கும்   முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய கடைகளிலும்  பொருட்களை UPI பரிவர்த்தனை மூலம் வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதனை செயல்படுத்தும் வகையில் சென்னை, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள 588 நியாயவிலைக் கடைகளில், 562 கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தி ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ளும்  நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மீதமுள்ள 26 கடைகளில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் எளிதில் டிஜிட்டல் பரிவர்த்தனை புரிந்து கொள்ளும் வகையில் "மொபைல் முத்தம்மா" என்கின்ற பெயர் கொண்டு எப்படி பணம் இல்லாமல் மொபைல் மூலம் பொருட்களை வாங்கலாம் என ரேசன் கடைகளில் விழிப்புணர்வு வாசகங்களும் வைக்கப்பட்டுள்ளது‌

சென்னை மாநகர் முழுவதும் மொத்தமாக 1700-க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் உள்ள நிலையில், 1500-க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.