முதலமைச்சரின் சவாலை எதிர் கொண்டு விவாதம் நடத்த தயார்...? - எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு குறித்து பொது மேடையில் விவாதம் செய்ய தயார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, பின்னர் பரப்புரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், மக்களை பற்றி துளியளவு கூட சிந்திக்காத கட்சி திமுக என்று கூறினார். தேர்தலின்போது, அனைத்து குடும்ப அட்டை இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம், எரிவாயு மானியம், முதியோர் உதவிதொகை உயர்த்துவது என பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவீசிய ஸ்டாலின், தற்போது இதையெல்லாம் செய்தாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் தான் நீட் கொண்டு வரப்பட்டது என்பதை கூட தெரியாமல் ஸ்டாலின் சவால் விடுகின்றார் என்றும், அதனை பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.