இரண்டு முறைகளுக்கு மேல் விபத்து ஏற்படுத்திய 500 வாகன ஓட்டிகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை - மாவட்ட எஸ்.பி தகவல்

கோவை மாவட்டத்தில் இரண்டு முறைகளுக்கு மேல் விபத்தை ஏற்படுத்திய 500 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து துறையினரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

இரண்டு முறைகளுக்கு மேல் விபத்து ஏற்படுத்திய 500 வாகன ஓட்டிகளின் உரிமத்தை  ரத்து செய்ய பரிந்துரை - மாவட்ட எஸ்.பி தகவல்

பொது இடங்களில் செல்போன் தவறவிட்டவர்கள் :

கோவை மாவட்டத்தில் பேருந்து உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தவறவிட்ட சுமார் 106 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன செல்போன்களை மீட்டு, அதனை உரியவர்களிடம், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து எஸ்.பி.பத்ரிநாராயணன் வழங்கினார். 

எஸ்.பி. செய்தியாளர் சந்திப்பு : 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி.பத்ரிநாரயாணன், கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான 350 சொல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 4 மாதங்களில் போக்சோ வழக்குகளில், 149 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 9 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது. வழக்கு விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தனிப்பிரிவு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.  ”பிராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற திட்டம்  மூலம் மாவட்ட போலீசார் 28 நாட்களில், 36 ஆயிரம் பள்ளி குழந்தைகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். அதில் 12 ஆயிரம் பேர் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகள். இந்த நடவடிக்கையால் குழந்தைகளுக்கு காவலர்கள் மீதுள்ள அச்சம் குறைந்துள்ளது. மேலும், கோவையில் குட்கா விற்பனை தொடர்பாக 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 347 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 கடைகளுக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது. 125 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  அதே போல்  கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 126 வழக்குகள், 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில்  ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார், மேலும் 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் சந்தேக மரணமாக பதிவாகும் வழக்குகளில் உறவினர்களுக்கு இறப்பு சான்றிதழ் பெற சிக்கல் இருந்தது, அவற்றிலிருந்து 140 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

கோவை மாவட்டத்தில் கடந்த 2019 – 2022 வரையில் நடந்த சாலை விபத்து மைனஸ் (-10) விழுக்காடாக குறைந்துள்ளது.  இருப்பினும் இரண்டு முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்தி 740 பேர் கண்டறியப்பட்டு, அதில் 500 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து துறைக்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களின் உரிமங்களையும் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார். மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டே மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.