கச்சத்தீவை மீட்டெடுப்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோள் - மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

கச்சத்தீவை மீட்டெடுப்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளதாக மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவை மீட்டெடுப்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோள் - மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

கட்சத்தீவை மீட்டெடுத்து மீண்டும் இந்தியாவிற்கு கிடைப்பது மற்றும் பாக் நீரிணை பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெப்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலம் பாரம்பரிய கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க முடியும் என்பதை தமிழக அரசு மீண்டும் வலியுறுத்துவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட 88 படகுகள் மற்றும் 23 மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிப்பதற்கு தூதரக ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வதற்கு மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அதிகபட்சமாக 113 நாட்கள் வரை இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள், திமுக அரசு பதவியேற்றவுடன் எடுத்த முயற்சிகள் மிக குறைந்த காலமான 16 நாட்களிலேயே தாய்நாடு திரும்பி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.