"ரூட்டு தலைக்கு ஜே" பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி கோஷமிட்டு அட்டகாசம்...மாணவர்களை எச்சரித்த போலீஸ்....!!

சென்னையில் ஓடும் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கண்டித்து எச்சரித்து அனுப்பினர்.

"ரூட்டு தலைக்கு ஜே" பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி கோஷமிட்டு அட்டகாசம்...மாணவர்களை எச்சரித்த போலீஸ்....!!

சென்னை பெசன்ட் நகரில் இருந்து அயனாவரம் வழித்தடத்தில் செல்லும் 23-C பேருந்து இன்று மதியம் நந்தனம் கலைக் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தது. அப்போது அப்பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி "ரூட்டு தலைக்கு ஜே" என்று கோஷமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சில மாணவர்கள் ஜன்னலை பிடித்து தொங்கி பேருந்தின் மேற்கூரையில் ஏற முற்பட்டனர். இதைக் கண்ட போக்குவரத்து போலீசாரும், சைதாப்பேட்டை போலீசாரும் பேருந்து நிறுத்ததில் நின்ற பேருந்தை தடுத்து பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை கீழே இறக்கி கண்டித்தனர்.

ஒரு சில மாணவர்கள் போலீசாரை கண்டு தப்பியோடிய நிலையில் மாணவர்களின் அட்டகாசத்தை போலீசார் வீடியோ பதிவு செய்தனர். மேலும், பேருந்தினுள் கோஷமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் எச்சரித்தனர்.

வீடியோ பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் காணொலியை கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பி மாணவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க அறிவுறுத்தவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.