பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்தி அதிமுக-வில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார் சசிகலா ....ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுக கொடியையும், பொதுச்செயலாளர் பெயரையும் பயன்படுத்தி அதிமுக வில் சலசலப்பை ஏற்படுத்த சசிகலா முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்தி அதிமுக-வில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார் சசிகலா ....ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுகவின் பொன்விழா ஆண்டு தினத்தன்று சசிகலா அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை பயன்படுத்தி கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்துள்ளது குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூறுகையில், அதிமுக என்ற கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்று வருவதாகவும், தொண்டர்களிடையே ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சசிகலா தவறான எண்ணத்தில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களிடம் தான் கட்சிக்கு உரிமை உள்ளது என்று டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ள நிலையில், கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.  

மேலும் திமுகவும், சசிகலாவும் கைகோர்த்து அதிமுக வில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, திமுகவினரை பணியில் அமர்த்த திமுக அரசு ஈடுபடுவதாக கூறினார். அம்மா உணவகத்தை மூடலாம் என்று திமுக அரசு நினைத்தால் அதற்கான தகுந்த நடவடிக்கையை அதிமுக எடுக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.