சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு.. அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு.. அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

9 பேர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல்:

இதுதொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சிறையில் உள்ள 9 காவலர்களும் நேரில் ஆஜர்:

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக வந்தது. அப்போது  இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.

விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு:

இதனையடுத்து சாட்சிய விசாரணையின் போது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் ரேவதியிடம் வாக்குமூலம் பெற்ற தூத்துக்குடி நீதிபதி சக்திவேல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.