தமிழகத்தில் 600 நாட்களுக்கு பிறகு நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு...

தமிழகத்தில் 600 நாட்களுக்கு பிறகு நாளை 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களுக்கு பூ, இனிப்பு கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..

தமிழகத்தில் 600 நாட்களுக்கு பிறகு நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு...

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டன. நிகழ் கல்வியாண்டில் 9 முதல் 12 வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

நீண்ட காலம் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் தடை பெறாமல் நடைபெற மாணவா்களுக்கு உரிய நேரத்தில் புத்தகங்கள் வழங்குதல், கல்வி தொலைக்காட்சியின் மூலம் அனைத்து வகுப்புகளுக்குக் காணொலிப் பாடங்களை வழங்குதல், வானொலி மூலமாக பாடங்களை ஒலிபரப்புதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன. இவை தவிர தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களின் தனிப்பட்ட முயற்சிகளாக வாட்ஸ்-ஆப், யு-டியூப் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து, மாணவா்கள் 19 மாத இடைவெளிக்குப் பிறகு நாளை பள்ளிக்கு வருகை தருவதால் முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவப் பகிா்வு, கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் மாணவர்களுக்கு முக்கியப் பாடக் கருத்துகளை உள்ளடக்கிய புத்தாக்கப் பயிற்சியை மேற்கொண்ட பிறகே முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.