கொரோனா விதிமுறை மீறல்... பெரம்பூரில் திருமண மண்டபத்திற்கு சீல்...

பெரம்பூரில் அளவுக்கதிகமான கூட்டத்தை சேர்த்த திருமண மண்டபத்திற்கு சீல் வைப்பு.

கொரோனா விதிமுறை மீறல்... பெரம்பூரில் திருமண மண்டபத்திற்கு சீல்...

சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் மற்றும் விதிமுறைகளை மீறும் நபர்களிடம் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. 

இதில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட மிக அதிகமான அளவு நவர்கள் கூடியுள்ளதாக திருவிக நகர் மண்டல அதிகாரி பரந்தாமனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவிக நகர் செயற்பொறியாளர் செந்தில்நாதன தலைமையிலான அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த மண்டபத்திற்கு சென்று அங்கு உள்ள நபர்களை வெளியேற வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் புளியந்தோப்பு துணை கமிஷனர்  தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்டபத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர். 

குறிப்பிட்ட அந்த மண்டபத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் அதை கட்டும்படி வலியுறுத்தினர். ஆனால் மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தியவர்கள்  அபராதத்தை கட்ட முடியாது என்று வாக்குவாதம் செய்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் வேறு வழியின்றி அந்த மண்டபத்திற்கு சீல் வைத்தனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.