சேலம் முழுவதும் அதிரடி சோதனை... ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்...

சேலத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 300 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். 

சேலம் முழுவதும் அதிரடி சோதனை... ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்...
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சேலம் அம்மாப்பேட்டை புறவழிச் சாலையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக இரு வாகனங்களில் வந்தவர்கள், போலீசாரைக் கண்டதும், வாகனங்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதைத் தொடர்ந்து வாகனங்களில் போலீசார் சோதனை நடத்திய போது மாட்டுத்தீவன மூட்டைகளுக்குள் குட்கா பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 300 கிலோ குட்கா பொருட்களையும், வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே லாரியில் நடத்திய சோதனையின் போது, ஓட்டுனர்கள் உட்பட 4 பேர் தப்பிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றர். மேலும் கடத்தலில் ஈடுபட்டது யார் மற்றும் குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
1 கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.