தொழில்நுட்ப மையங்களாக மாறும் தொழிற்பயிற்சி நிலையங்கள்: முதலமைச்சர் தலைமையில் கையெழுத்தான ஒப்பந்தம்!
அரசு பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடு என்பது மிக அவசியமானதாக உள்ளது. இந்த நிலையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்படுள்ளது. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, தமிழகத்தில் தற்போது உள்ள 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை 4.0 தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் பயிற்சி பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.