வறண்டது சிறுவாணி அணை கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

வறண்டது சிறுவாணி அணை கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை வறண்டு போயுள்ளதால் கோவை வட்டாரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, மாநகருக்கான குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் ஒட்டுமொத்த உயரம் 50 அடி ஆகும். இதில் 45 அடிகள் வரை தண்ணீர் தேக்க இயலும்.

சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 4 வால்வுகள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அதன் பிறகு இந்த தண்ணீர் பெரிய குழாய்கள் மூலம், கோவைக்கு கொண்டு வரப்பட்டு, மாநகரம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் மழை இல்லை. எனவே சிறுவாணி அணை படிப்படியாக வறண்டு வருகிறது. அங்கு தற்போது அரை அடி என்ற நிலையில்தான் தண்ணீர் உள்ளது. இதன்காரணமாக அணைக்கட்டின் பெரும்பாலான பகுதிகள், தண்ணீரின்றி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது. 

சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை மாவட்டத்துக்கான கூட்டுகுடிநீர்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு உள்ள உறை கிணற்றில் 4 வால்வுகள் உண்டு. இதில் 3 தண்ணீர் மட்டத்துக்கு மேல் தெரிகிறது. எனவே மீதம் உள்ள ஒரு வால்வு மூலம் மட்டுமே தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது. இது 15 நாட்கள் வரை தாங்கும். சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கனமழை எதுவும் பெய்யவில்லை என்றால் ஒட்டுமொத்த அணையும் வறண்டு, கோவையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர குடிநீர் அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் பெரிய அளவில் மழை இல்லை. எனவே அங்கு தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நிலைமை இப்படியே போனால் 15 நாட்களுக்கு பிறகு உறைகிணற்றில் தண்ணீர் இருக்காது. கேரளா மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. எனவே சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அதுவும்தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அங்கு இன்னும் ஒருசில நாட்களில் பருவமழை தொடங்கி விடும். எனவே சிறுவாணி அணையில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து, குடிதண்ணீர் பிரச்சினை நீங்க வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.