தாயின் முறையற்ற உறவுக்கு தடையாய் இருந்த மகன் குத்தி கொலை

தாயின் முறையற்ற உறவுக்கு தடையாய் இருந்த மகன் குத்தி கொலை

சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன்(38). பிளம்பரான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், மதன் குமார்(17) மற்றும் ஜீவா என்கிற மகன்கள் உள்ளனர். மதன் குமார் வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமி புளியந்தோப்பில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். 

ஆறுதல் வார்த்தைகளால்  தன் வசம் இழுத்த கள்ளகாதலன்

மதுபோதைக்கு அடிமையான இளஞ்செழியன் தினமும் தனது மனைவி தனலட்சுமியுடன் சண்டையிட்டு வந்ததால், ஒரே கம்பெனியில் பணியாற்றி வந்த வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக்(42) என்பவருடன்  இளஞ்செழியனின் மனைவி தனலட்சுமிக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக் தனலட்சுமிக்கு ஆறுதல் வார்த்தை கூறி கணவர் இளஞ்செழியனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க உதவி புரிந்துள்ளார். நாளடைவில் தனலட்சுமிக்கும், கார்த்திக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருவரும் கடந்த 5 வருடங்களாக வேளச்சேரியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். 

ஆத்திரமடைந்த கள்ளகாதலன் - மகனை கத்தியால் குத்தியது - பரபரப்பு

இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளஞ்செழியனின் மனைவி தனலட்சுமி கார்த்திக்கிடம் இருந்து பிரிந்து குடும்பத்துடன் விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் காதலி தனலட்சுமி அவரது கணவருடன் சென்றதால் ஆத்திரமடைந்த கார்த்திக், கடந்த 7ஆம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள இளஞ்செழியன் வீட்டிற்கு சென்று காதலி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது இளஞ்செழியனின் மகன் மதன்குமாருக்கும், கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவன் மதன்குமாரின் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பியோடி உள்ளார். படுகாயமடைந்த மதன்குமாரை அருகிலிருந்த நபர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காதலி தனலட்சுமி பிரிந்து செல்ல சிறுவன் மதன்குமாரே காரணம்

இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் ஆபாசமாக பேசுதல்,கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வந்தனர். இதற்கிடையே  இளஞ்செழியன் வீட்டருகே விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது கார்த்திக்கை போலீசார் மடக்கி கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 5 வருடத்திற்கு பிறகு போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய தந்தை இளஞ்செழியனோடு சேர்ந்து வாழுமாறு தாய் தனலட்சுமியை அவரது மகன் மதன்குமார் மனதை மாற்றி அழைத்து சென்றதாகவும்,  இதனால் தன்னிடம் இருந்து காதலி தனலட்சுமி பிரிந்து செல்ல சிறுவன் மதன்குமாரே காரணம் என ஆத்திரமடைந்து மதன்குமாரை கத்தியால் வெட்டியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மதன்குமார் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.